அம்பாறை – இங்கினியாகல பொலிஸ் பிரிவில் விலங்குகளை வேட்டையாடச் சென்றபோது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி 27 வயதுடைய இராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
சம்பவம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், அம்பாறை – இங்கினியாகல நாமல்ஓயா பிரதேசத்தில் புதன்கிழமை இரவு இடம்பெற்ற சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். விலங்குகளை வேட்டையாடுவதற்காக மூவர் நாமல்ஓயா – நாமல்தலாவ என்ற காட்டுப் பகுதிக்கு இரவு 10.30 மணியளவில் சென்றுள்ளனர்.
இவ்வாறு சென்ற மூவரில் 27 வயதுடைய ஒருவர் துப்பாக்கிச்சூட்டு காயத்துடன் இங்கினியாகல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்த நபர் இராணுவ வீரர் என்று விசாரணைகள் மூலம் தெரிய வந்துள்ளது.
இது தொடர்பில் 36 வயதுடைய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடமிருந்து துப்பாக்கி ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது. இது கொலையா என்பது தொடர்பில் பொலிஸாரால் விசாரணகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
கைது செய்யப்பட்ட நபர் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதற்கமைய தான் மான் ஒன்றைச் துரத்திச் சென்று அதன் மீது துப்பாக்கிச் சூட்டை நடத்தியதாகவும்,
இதன்போதே தனது நண்பன் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியதாகவும் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் தெரிவித்துள்ளார். இங்கினியாகல பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர் என்றார்.