A-9 வீதியில் கிளிநொச்சி நகரில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த பாரவூர்தி மீது மற்றொரு பாரவூர்தி மோதி விபத்துக்குள்ளானதில் படுகாயமடைந்த சாரதி ஒருவர் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த விபத்து சம்பவம் 19.02.2021 அதிகாலை 3.30 மணியளவில் கிளிநொச்சி வைத்தியசாலைக்கு அண்மையில் ஏ-9 வீதியில் இடம்பெற்றுள்ளது. நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பார ஊர்தியின் பின்பகுதியில் மோதியே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
நெல் ஏற்றி சென்ற பார ஊர்தியின் சாரதி நித்திரை கொள்வதற்காக வீதியின் ஓரத்தில் வாகனத்தை நிறுத்தி வைத்துள்ளார். யாழிலிருந்து தெற்கு நோக்கி பயணித்த மற்றுமொரு பார ஊர்தி நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனத்துடன் மோதியுள்ளது.
விபத்தில் மோதிய பார ஊர்தி மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதுடன், சாரதி சாதாரண காயங்களுடன் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பான விசாரணைகளை கிளிநொச்சி பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.