அமெரிக்காவின் 46ஆவது ஜனாதிபதியாக பதவி ஏற்றுள்ள ஜோ பைடன் தலைமையிலான நிருவாகம் இலங்கையின் கேந்திர முக்கியத்தினை விடவும் ஜனநாயக விழுமியங்கள், மனித உரிமை விவகாரங்கள், சமத்துவம், சுயாதீன நீதித்துறை, சமூக குணாம்சங்கள் உள்ளிட்டவற்றிலேயே அதீதமான கரிசனைகளைக் கொண்டிருக்கும் என்று ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் எதிர்க்கட்சித்தலைவரின் சர்வதேச உறவுகள் தொடர்பான மூத்த ஆலோசகரும், இராஜதந்திரியுமான கலாநிதி தயான் ஜயதிலக தெரிவித்தார்.
இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
2019ஆம் ஆண்டு நவம்பரில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் பின்னர் இலங்கையில் ஜனநாயகம், மனித உரிமைகள், சமத்துவம், சுயாதீன நீதித்துறை உள்ளிட்ட அனைத்துக் கட்டமைப்புக்களிலும் விமர்சனங்களுக்குரிய சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன.
இதனைவிடவும், அரசாங்கத்தில் உள்ள அமைச்சர் ஒருவர் சாதாரண பிரஜைகளுக்கு இராணுவப்பயிற்சி அளிப்பதற்கான பரிந்துரையை செய்திருக்கின்றார். ஜனநாயகம், மனித உரிமைகள் விடயத்தில் வெளிப்படைத்தன்மையுடன் மீண்டெழ வேண்டிய நிலையில் இருக்கும் இலங்கையில் இராணுவப்பயிற்சிக்கான யோசனையை முன்வைப்பதானது ஆபத்துக்கள் நிறைந்ததாக உள்ளது.
ஏற்கனவே நாட்டின் தலைமைத்துவத்தினை ஏற்றுள்ளவரும், அவரைச் சூழ்ந்துள்ளவர்களும் இராணுவப் பின்னணியைக் கொண்டவர்களாக இருக்கின்றார்கள். சிவில் நிருவாகத்தில் இராணுவத்தினரின் உள்ளீர்ப்புக்கள் விமர்சிக்கப்படுகின்றது.
இவ்வாறான நிலையில் விடைபெற்றுச் சென்ற டொனால்ட் ட்ரம்ப் நிருவாகத்திற்கு முற்றிலும் எதிரான போக்குடையதாகவே பைடனின் நிருவாகம் அமையப்போகின்றது. இலங்கையின் ஆட்சியாளர்கள் ட்ரம்ப் வாதிகளாகவே இருக்கின்றனர். அவருடைய செயற்பாடுகளை ஒத்த சில நிகழ்வுகள் இங்கும் நடைபெற்றிருக்கின்றன.
ட்ரம்பின் இறுதிக்காலத்தில் நடைபெற்ற ஜோர்ஜ் புளொட்டின் கொலை, மனித உரிமைகள் பேரவையிலிருந்தான வெளியேற்றம் என்பன கடுமையான எதிர்ப்புக்களை அங்கு ஏற்படுத்தியிருந்தன. அதன் காரணமாகவே ஆட்சி மாற்றமும் ஏற்பட்டிருக்கின்றது.
அதுமட்டமன்றி இறுதியாக ஜனவரி ஆறில் நடைபெற்ற கப்பிடல் ஹில் வன்முறைகளும் சுமூக அதிகார மாற்றம் சம்பந்தமாக கேள்விகளை ஏற்படுத்தியிருக்கின்றது.
இலங்கையின் ஆட்சியாளர்களும் முழுமையான அதிகாரம் தமது கைகளில் உள்ளது என்ற அடிப்படையிலேயே சர்வதேச ரீதியிலும் உள்நாட்டிலும் பிரதிபலிப்புக்களைச் செய்கின்றார்கள். மிருசுவில் படுகொலையில் குற்றவாளியாக காணப்பட்டவருக்கு பொதுமன்னிப்பளித்தமை முதல் பல விடயங்களை உதாரணமாக கூற முடியும்.
ஆகவே ஜனாதிபதி பைடன், துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ், இராஜாங்க செயலாராக நியமிக்கப்படவுள்ள அன்டனி பிளிங்டன், பாதுகாப்புச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள லொயிட் ஒஸ்ரின் உள்ளிட்டவர்கள் ஜனநாயகம் தொடர்பில் அதீத கரிசனை உடையவர்கள்.
அவர்கள் மீண்டும் உலக நாடுகளுடன் இருதரப்பு உறவுகளை மேம்படுத்த முனையும் போது ஜனநாயகம் உள்ளிட்ட இதரவிடயங்கள் தொடர்பில் குறைபாடுகளைக் கொண்டிருக்கும் நாடுகளுக்கு நேரடியாகவே சுட்டிக்காட்டத் தயங்கமாட்டார்கள். ஜனநாயகத்தினை மனித உரிமை விடயங்களை வலுவிழக்கச் செய்வதற்கும் இடமளிக்க மாட்டார்கள்.
அதேநேரம், தற்போது ஆட்சியில் உள்ள அரசியல் கட்சியானது சீனாவுடன் வர்த்தக உறவுகளைக் கடந்ததொரு உறவினைப் பேணுவதற்கு முற்படுகின்றது. குறிப்பாக சீன கம்னியூஸ்ட் கட்சியுடன் பொதுஜன பெரமுனவும் இருதரப்பு கலந்துரையாடல்களை மேற்கொண்டுள்ளது.
அத்துடன் 2021ஆம் ஆண்டுக்கான சீன தூதுவரின் வாழ்த்துச் செய்தியில் ஒரேபட்டி ஒரே மண்டலம் முன்முயற்சி திட்டம் இலங்கை ஜனாதிபதியின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் உள்ளீர்க்கப்பட்டதாக குறிப்பிடப்படுகின்றது.
இவை சீனாவுடன் இருதரப்பு உறவுகளைத் தாண்டிய தொரு பந்தத்தினை கொண்டிருப்பதை வெளிப்படுத்துகின்றன. ஆகவே பூகோள அரசியலில் அமெரிக்க இந்த விடயங்கள் தொடர்பில் கவனத்தில் கொள்கின்றபோது, ஜனநாயகம், மனித உரிமைகள் விடயங்களில் இறுக்கமான நிலைப்பாடுகளை எடுக்கலாம் என்றார்.