ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் எதிர்வரும் 46ஆவது அமர்வில் கொண்டுவரப்படவுள்ள இலங்கை தொடர்பான தீர்மானத்திற்கு இணை அனுசரணை வழங்க இலங்கை அரசாங்கம் மறுப்புத் தெரிவித்துள்ளது.
இலங்கை தொடர்பாக செயலாற்றிவரும் முக்கிய நாடுகளது குழுவினர் இணை அனுசரணை வழங்குமாறு இலங்கை அரசாங்கத்திடம் விடுத்திருந்த வேண்டுகோள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக அறியமுடிகின்றது.
இலங்கை தொடர்பாக செயலாற்றிவரும் முக்கிய நாடுகள் குழுவில் பிரித்தானியா, கனடா, ஜேர்மனி ,வடக்கு மஸிடோனியா மற்றும் மொன்டிநீக்ரோ ஆகியன இடம்பெற்றுள்ளன.
இலங்கை தொடர்பான புதிய தீர்மானத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள வரைவுகள் சமரசமுடையதாக காணப்படுவதாக சிவில் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் குறிப்பிடும் அதேவேளை இலங்கையின் வெளிவிவகார செயலாளர் அட்மிரல் ஜெயநாத் கொலம்பகே தீர்மானத்தைக் கூட ஏற்றுக்கொள்ள முடியாது எனக் கூறுகின்றார்.
புதிய தீர்மானத்திற்கு உடன்படுவது இலங்கை அரசாங்கத்தைப் பொறுத்தவரை அரசியல் ரீதியாக சவால் மிக்கது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கையின் அரசியல் யாப்பிற்கும் இறையாண்மைக்கும் மக்களுக்கும் எதிரானது என்பதால் ஜெனிவா தீர்மானத்திற்கு இணை அனுசரணை வழங்கியமை ஒரு அரசாங்கத்தை பதவியிலிருந்து அகற்றும் நிலைமைக்கு வழிகோலியிருந்தது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
புதிய தீர்மானம் என்றாலும் அது நடக்குமா இல்லையா என்று கூறமுடியாது. அதுவும் கூட அரசாங்கத்திற்கு பெரும் சவாலாகும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
நன்றி: சண்டே டைம்ஸ்