60 வருடங்களாக குகையில் வாழும் சாமியார் ஒருவர் அயோத்தியில் ராமர் கோயில் கட்ட ஒரு கோடி ரூபாய் நன்கொடை கொடுத்து மக்கள் மத்தியில் பிரபல்யம் அடைந்துள்ளார்.
உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோயிலைக் கட்ட கடந்த 2019 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்தது. இந்த ராமர் கோயில் கட்டுமானப் பணிகளுக்குக் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 5 ஆம் திகதி பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார்.
சுமார் 161 அடி உயரத்தில் மூன்று தளங்களையும் 318 தூண்களையும் கொண்டிருக்கும் வகையில் இந்தக் கோயில் கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. ராமர் கோயில் கட்டுமானப் பணிகளுக்குத் தேவையான நிதியை திரட்டும் பணிகள் தொடங்கி உள்ளன. இந்த பணியை பெப்ரவரி 17 ஆம் தேதி வரை நடத்தி, கோயில் கட்டுமானப் பணிகளை வரும் 2024ஆம் ஆண்டிற்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
கட்டுமானப் பணிகளுக்கு தேவையான நிதி திரட்ட 10, 100 மற்றும் 1000 ரூபாய் பற்றுச்சீட்டுக்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. ராமர் கோயில் கட்டுமான பணிக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் நிதி குவிந்து வருகிறது.
அரசியல் தலைவர்கள், சினிமா, விளையாட்டு என பல்வேறு பிரபலங்களும் நிதி வழங்கி வருகின்றனர். அந்த வகையில், 83 வயதான குகை சாமியார் ஒருவர் வழங்கிய நன்கொடை நாட்டையே திரும்பிப்பார்க்க வைத்துள்ளது.
உத்தரகாண்ட் மாநிலம், ரிஷிகேஷில் உள்ள குகையில் கடந்த 60 ஆண்டுகளாக வாழ்ந்து வருபவர் சுவாமி சங்கர்தாஸ். அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்காக நன்கொடை வசூலிக்கப்படுவதை அறிந்த அவர், தான் சேமித்து வைத்திருந்த ஒரு கோடி ரூபாய் நிதியை கோயில் கட்ட நன்கொடையாக வழங்க தீர்மானித்தார்.
அவரது கணக்கில் போதிய நிதி இருப்பதை உறுதி செய்த வங்கி அதிகாரிகள், இதற்கான நிதி திரட்டும் உள்ளூர் ஆர்.எஸ்.எஸ் நிர்வாகிகளைத் தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தனர். காசோலையை வழங்கினார். குகையில் வசித்து வரும் சாமியார், இவ்வளவு பெரிய தொகையை நன்கொடையாக அளித்தது பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து குகை சாமியார் சுவாமி சங்கர் தாஸ் கூறுகையில்,
“நான் அரை நூற்றாண்டுக்கும் மேலாக குகையில் வசித்து வருகிறேன். என்னை காண வருகை தரும் பக்தர்களிடமிருந்து வரும் நன்கொடைகளில் நான் வாழ்கிறேன். விஎச்பி-யின் பிரசாரத்தைப் பற்றி அறிந்ததும், ராமர் கோயிலுக்கான எனது சேமிப்பு தொகையை நன்கொடையாக வழங்க முடிவு செய்தேன். இந்த கோயிலுக்கு தான் நாம் அனைவரும் நீண்ட காலமாக கனவு காண்கிறோம்,” என்றார்.
நன்றி : மாலைமலர்