தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவர் கருணா அம்மான் எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் மற்றும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் பிள்ளையான் எனப்படும் சிவநேசத்துரை சந்திரகாந்தன் ஆகியோருடன் இந்திய தரப்பு சந்திப்புக்களை நடத்தியுள்ளது.
பாராளுமன்ற உறுப்பினர் சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) மற்றும் விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா அம்மான்) ஆகியோர் தலைமையிலான கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த பிரதிநிதிகளுடன் இந்திய பிரதி உயர் ஸ்தானிகர் வினோத் கே ஜேக்கப் இருவேறு சந்திப்புக்களில் ஈடுபட்டிருந்தார்.
இந்த இரு சந்திப்புக்களிலும் இலங்கையுடனான நீண்ட அபிவிருத்தி பங்குடைமையை பேணுவதற்கான இந்தியாவின் உறுதிப்பாட்டினை பிரதி உயர் ஸ்தானிகர் ஜேக்கப் அவர்கள் வலியுறுத்தியிருந்தார்.
பிரதி உயர் ஸ்தானிகர் ஜேக்கப் மற்றும் சிவநேசதுரை சந்திரகாந்தன் ஆகியோர் மாகாண சபைகள் மற்றும் 13ஆவது திருத்தத்தினை முழுமையாக அமுல்படுத்துதல் குறித்தும் கலந்துரையாடியுள்ளனர்.
போரினால் பாதிக்கப்பட்ட விதவைகள் மற்றும் விசேட தேவையுடையோர்களுக்கான வாழ்வாதார வாய்ப்புக்கள், கல்வி மற்றும் புலமைப்பரிசில் உள்ளிட்ட பல்வேறு விடயங்களின் எதிர்கால அபிவிருத்தி ஒத்துழைப்புக்கான சாத்தியப்பாடுகள் தொடர்பாகவும் இந்த சந்திப்பின்போது விநாயகமூர்த்தி முரளிதரன் எடுத்துரைத்துள்ளார்.
மாகாண சபை மற்றும் 13 ஆவது திருத்தத்தினை முழுமையாக அமுல்படுத்துதல் ஊடாக தமிழ் மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றுவதற்கான சிறந்த வழி அர்த்தப்புஷ்டியான பரவலாக்கம் என்பதே இந்திய அரசாங்கத்தின் நிலைப்பாடு என்பதனை பிரதி உயர் ஸ்தானிகர் இந்த சந்தர்ப்பத்தில் வலியுறுத்திக்கூறினார்.