அம்பாறை மாவட்டம் சம்மாந்துறையில் திண்மக் கழிவகற்றல் சேவையின்போது ஒரு வீட்டின் குப்பைப் பொதியுடன் தவறுதலாக வீசப்பட்ட 12 பவுண் தங்க நகைகள் உரிமையாளரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
கடந்த 20ஆம் திகதி சம்மாந்துறை சின்னப்பள்ளி வீதியில் வீட்டு உரிமையாளர் தனது வீட்டில் திருமண நிகழ்வு இடம்பெற்றமையினால் 12 பவுண் தங்க நகையை தன்னையறியாமல் குப்பையோடு குப்பையாக கழிவுப் பொதிக்குள் வீசியுள்ளார்.
அப்பொதி சம்மாந்துறை பிரதேச சபையின் கழிவகற்றல் வாகனத்துக்கு வழங்கப்பட்ட நிலையில், வீட்டு உரிமையாளர் வீட்டிலிருந்த நகையை தேடியபோது அவை காணாமல் போயிருப்பது தெரிய வந்துள்ளது.
இதனையடுத்து இவ்விடயம் சம்மாந்துறை பிரதேச சபை திண்மக்கழிவகற்றல் சேவை மேற்பார்வையாளரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
இதனை தொடாந்து சம்மாந்துறை பிரதேச சபை செயலாளர் எம்.ஏ.கே.முஹம்மதின் பணிபுரைக்கமைவாக உடனடியாக செயற்பட்டு, சம்மாந்துறை பிரதேச சபையின் வங்களாவடி சேதனைப் பசளை உற்பத்தி நிலையத்தில் ஊழியர்களின் உதவியுடன் திண்மக்கழிவகற்றல் வாகனத்தில் சேகரிக்கப்பட்டிருந்த அனைத்து கழிவுக் குப்பைப் பொதிகளையும் பெரும் சிரமங்களுக்கு மத்தியில் பிரித்து 12 பவுண் தங்க நகை தேடிக்கண்டு பிடித்து உரிய நபரிடம் 21.02.2021 அன்று ஒப்படைக்கப்பட்டது.
இவ்வாறாக நகை, பணம், பெறுமதியான பொருட்கள் உரிமையார்களை அறியாமல் குப்பைகளுக்குள் வீசப்பட்ட பொருட்கள் உரிமையாளர்களிடம் ஒப்படைத்த பல சம்பவங்கள் அம்பாறை மாவட்டத்தில் இடம் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.