பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு பல வருடங்களாக சிறையில் உள்ள தமிழ் இளைஞர், யுவதிகளின் விடுதலைக்காகவும், அரசியல் கைதிகளுக்காகவும், மிக நீண்ட காலமாக செயல்பட்டு வந்த சிரேஷ்ட சட்டத்தரணி கௌரி சங்கரி தவராசாவின் திடீர் மரணம் தமிழ் மக்களுக்கு பாரிய இழப்பு என நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.
சிரேஷ்ட சட்டத்தரணி கௌரி சங்கரி தவராசாவின் திடீர் மரணம் குறித்து அவர் இன்று (24) விடுத்துள்ள இரங்கல் செய்தியில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
சட்டத்தரணி கௌரி சங்கரி தவராசாவின் இழப்பு தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்காக நம்பி இருந்தவர்களுக்கு பாரிய இழப்பாகவே அமைந்துள்ளது.
ஆட்கடத்தல், காணாமல் ஆக்கப்பட்டமை மற்றும் அரசியல் படுகொலைகள் உள்ளிட்ட பல்வேறு வழக்குகளுக்காக உயர்நீதிமன்றத்தில் வாதாட்டங்களை முன்வைத்து உள் நாட்டிலும், வெளி நாடுகளிலும் பேசப்பட்ட பிரபல சட்டத்தரணி கௌரி சங்கரி தவராசா ஆவர்.
என்னை அவசர கால சட்டத்தின் கீழ் கைது செய்தபோது எனது விடுதலைக்காக நீதிமன்றத்தில் வாதாடி பிணையில் செல்ல அனுமதி பெற்றுத் தந்தவர். அவரின் இழப்பை ஈடு செய்ய முடியாத நிலையில் நாம் உள்ளோம்.
அவரை இழந்து நிற்கும் கணவர் கே.வி.தவராசா மற்றும் உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவிப்பதோடு அவரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன் என நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தனது இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.