சர்வதேச அரங்கில் உள்ள எந்தவொரு நாட்டினதும் உள்ளக விடயங்களில் பிற நாடுகள் தலையீடு செய்வதற்கு இடமளிக்க முடியாது என்பதே மக்கள் சீனக் குடியரசின் நிலைப்பாடாகும். இதனை அடியொற்றியதாகவே ஜெனிவாவிலும் எமது தீர்மானமும் செயற்பாடும் இருக்கும் என்று இலங்கைக்கான சீன தூதரகத்தன் அரசியல் பிரிவுத் தலைவரும், ஊடகப்பேச்சாளருமான லு சொங் தெரிவித்தார்.
அந்த வகையில் மனித உரிமைகள் சார்ந்த விடயங்கள், இனமுரண்பாடுகளுக்கான தீர்வுகள் என்பதுள்ள விடயங்கள் இலங்கையின் உள்ளக விடயங்களாகும் இதில் மக்கள் சீனக் குடியரசு ஒருபோதும் தலையீடு செய்யாது. ஏனைய நாடுகள் தலையீடு செய்வதையும் விரும்பாது என்றும் அவர் குறிப்பிட்டார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் சீனா இலங்கை தொடர்பிலான புதிய பிரேரணை கொண்டுவரப்பட்டு வாக்கெடுப்பு நடத்தப்பட்டால் எவ்விதமாக செயற்படவுள்ளது என்பது தொடர்பில் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
மனித உரிமைகள், இன முரண்பாடுகளுக்கான தீர்வுகள் தொடர்பிலான விடயங்கள் இலங்கையின் உள்ளக விடயமாகும். இலங்கை இறைமை உள்ள நாடு என்ற வகையில் இந்த விடயத்தில் பிற தரப்புக்கள் தலையிடுவது பொருத்தமற்றதாகும்.
எம்மைப்பொறுத்தவரையில் மக்கள் சீனக் குடியரசின் உள்ளக விடயங்களில் பிற் நாடுகள் தலையீடுகளைச் செய்வதை விரும்புவதில்லை. அதற்கு இடமளிப்பதும் இல்லை. அதுபோன்றே உலகில் உள்ள எந்தவொரு நாட்டினதும் உள்ளக விடயங்களில் பிற நாடுகளோ அல்லது சக்திகளோ தலையீடு செய்வதற்கு இடமளிக்கமுடியாது. இதனை அடியொற்றியதாகவே ஜெனிவாவிலும் எமது நிலைப்பாடு அமையும்.
அடுத்ததாக, மனித உரிமைகள் விடயமானது இறைமையுள்ள ஒவ்வொரு நாடுகளினாலும் பின்பற்றப்படும் விடயமாகும். இந்த விடயம் அரசியல் மயப்படுத்தப்பட்டுள்ளது. அவ்வாறு அரசியல் மயப்படுத்தப்பட்ட மனித உரிமைகள் விடயத்தினை நாடொன்றுக்கு எதிராக ‘ஆயுதமாக’ பயன்படுத்துவதற்கு அனுமதிக்க முடியாது என்றார்.
இதேவேளை, இலங்கை விவகாரம், ஐக்கிய நாடுகள் பொதுச்சபைக்கு அனுப்பட்டு செயலாளர் நாயகத்தின் பரிந்துரையில் ஐ.நா.பாதுகாப்புச்சபைக்கு சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தி;ற்கு அனுப்புவதற்காக அனுப்படுகின்றபோது, சீனா தனது வீட்டோவைப் பயன்படுத்துமா என்று வினா எழுப்பியபோது, ‘அவ்வாறான நிலைமை ஏற்படுமென்று தெரியவில்லை’ இருப்பினும் ‘நான் மேற்குறிப்பிட்ட நிலைப்பாடே இந்த வினாவுக்கும் பொருந்தும்’ என்றும் தெரிவித்தார்.