ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தீர்மானம் குறித்து பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட அமைச்சர்கள் குழு மஹாசங்கத்தினருடன் தீவிர கலந்துரையாடலை மேற்கொண்டு ஆலோசனைகளைப் பெற்றுள்ளது.
ஜெனீவா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அமர்வுகளில் இலங்கைக்கு எதிராக எதிர்வரும் மார்ச் மாதம் தாக்கல் செய்யப்படவுள்ள தீர்மானங்கள் குறித்து கலந்துரையாடும் வகையிலான சந்திப்பொன்று மஹாசங்கத்தினருக்கும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கும் இடையே இடம்பெற்றுள்ளது.
இந்தச் சந்திப்பு 10/02/2021 அன்று பிற்பகல் அலரி மாளிகையில் நடைபெற்றது.
இலங்கைக்கு எதிராக முன்வைக்கப்படும் தீர்மானங்கள் அடங்கிய அறிக்கை மற்றும் அது தொடர்பாக எதிர்காலத்தில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து மஹாசங்கத்தினரின் ஆலோசனைகளையும் கருத்துக்களையும் பெற்றுக்கொள்ளும் நோக்கில் இச்சந்திப்பு நடைபெற்றது.
கொவிட்-19 தொற்று நிலைமையை வெற்றிகரமாகக் கட்டுப்படுத்திய உலக நாடுகளுக்கிடையே இலங்கை முன்னணியில் காணப்படுகின்ற நிலையில், நாட்டை இழிவுபடுத்தும் நோக்கில் மிகவும் தவறான கருத்துக்களை உள்ளடக்கி மிக மோசடியான முறையில் இந்த மனித உரிமைகள் திணைக்கள அறிக்கை வடிவமைக்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.
நாட்டின் வெற்றிக்கும், இறையாண்மைக்குத் தீங்கு விளைவிக்கும் வகையிலான 16 விடயங்களை உள்ளடக்கி ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆணையாளர் இந்த அறிக்கையைச் சமர்ப்பித்துள்ளார் என தெரிவித்தார்.
இதுகுறித்து, பேராசிரியர் மெதகொட அபயதிஸ்ஸ தேரர், “இதுபோன்ற தீர்மானமிக்கதொரு தருணத்தில் மரியாதைக்குரிய மஹாசங்கத்தினரின் ஆலோசனை மற்றும் அனுசாசனத்தைப் பெறுவதற்குத் தீர்மானித்தமை குறித்து நான் பிரதமர் உள்ளிட்டோருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
இதுபோன்ற சூழ்நிலையில் ஜெனீவா மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு எதிரான தீர்மானமொன்றைச் சமர்ப்பிப்பது பொருத்தமற்றது. அதற்குப் பதிலாக எமது தரப்பு நீதியை எடுத்துரைக்கும் பிரதிவாத அறிக்கையொன்றை மாத்திரம் முன்வைக்க வேண்டும்.
மனித உரிமைகள் ஆணைக்குழுவின் நோக்கம் நாட்டைப் பிரிப்பதேயாகும். மனிதாபிமான முறையின் கீழ் பயங்கரவாதத்தை ஒரு முடிவுக்குக் கொண்டுவருவது போர்க்குற்றம் என்று கூறுவது பாரிய குற்றமாகும்.
இந்தத் தீர்மானத்திற்கு அமைவான நல்லிணக்கம் மிகவும் ஆபத்தானது. அத்தகைய உடன்பாடு இல்லாமல் பாராளுமன்றத்தில் தேசபற்றுச் சட்டத்தை நிறைவேற்றுவதற்கு நேரம் ஒதுக்குவது பொருத்தமானது.
இந்தச் சூழ்நிலையை எதிர்கொள்ள பௌத்த நாடுகளுக்கு நமது தேரர்களின் ஊடாக சில தாக்கத்தை ஏற்படுத்த முடியும். அதனூடாக நேர்மறையான பதிலை நாட வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
இதன்போது கருத்துத் தெரிவித்த பெங்கமுவே நாலக தேரர், “மனிதாபிமான செயற்பாட்டின் மூலம் பெற்ற சுதந்திரத்தைப் பாதுகாத்துக்கொள்ள வேண்டும். சிறிமாவோ பண்டாரநாயக்க மற்றும் லக்ஷ்மன் கதிர்காமர் பின்பற்றிய வெளியுறவுக் கொள்கைகளை கவனத்தில் கொண்டு நாம் செயற்பட வேண்டும்” எனக் குறிப்பிட்டார்.
இதேவேளை, “மங்கள சமரவீர ஒப்புக் கொண்ட 30 (1) தீர்மானம் நாட்டில் நீண்டகாலத் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இந்தத் தீர்மானத்தின் விளைவாக பொருளாதாரத் தடைகள், பயணத் தடை மற்றும் சர்வதேச நாடுகளின் ஆதரவு கிடைக்காமை போன்ற பல விடயங்கள் தொடர்பாக சிக்கல் நிலை உருவாக்கக்கூடும்.
அந்தத் தீர்மானத்திற்கு எதிராக எமக்குச் சார்பாக விளங்கும் நாடுகளின் எண்ணிக்கையை அதிகரித்துக் கொள்வது மிகவும் முக்கியமானதாகும்” என அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.
இதன்போது கிரிந்தே அஸ்ஸஜி தேரர் கருத்துத் தெரிவிக்கையில், “இந்த ஆபத்துக்கு குறிப்பிடத்தக்க இரு காரணிகள் பங்களிப்புச் செலுத்துகின்றன. இஸ்லாமிய தீவிரவாதம் மற்றும் கிழக்கு முனையத்தை இந்தியாவுக்கு வழங்காமை என்பதாகும். இறுதியில் அமெரிக்காவின் தேவைகள் நிறைவேற்றப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இவ்விடயம் தொடர்பாக நமது நாடு சார்பாக கால அவகாசத்தைக் கோர வேண்டும்” என அவர் தெரிவித்தார்.
இந்நிலையில், கால அவகாசத்திற்கு உடன்படுவதற்கான வாய்ப்பு மிகக் குறைவாகவே காணப்படுவதாகச் சுட்டிக்காட்டிய அமைச்சர் விமல் வீரவன்ச, எவ்வளவு விளக்கமளித்தாலும் மாறாத நிலைப்பாட்டிலுள்ள நாடுகளினாலேயே இலங்கைக்கு அச்சுறுத்தல் காணப்படுவதாகத் தெரிவித்தார்.
அத்துடன், சில நாடுகளின் கொள்கைகள் மாறாது என்றும், தங்களுக்கு ஆதரவாக இருக்கும் நாடுகளை வெற்றி கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறினார்.
இதுகுறித்து நெதகமுவே விஜய மைத்திரி தேரர் கூறுகையில், “இலங்கைக்கு வெளிநாடுகளின் ஆதரவைப் பெற்றுக் கொள்வதுடன், தமிழ் புலம்பெயர்ந்தோரின் கருத்திற்குச் செயற்படாத தூதரக சேவையைப் பலப்படுத்துதல் ஆகியவற்றின் மூலம் இந்தச் சூழ்நிலையை எதிர்கொள்ள முடியும்” என்றார்.
இதையடுத்து, மஹாசங்கத்தினரின் ஆலோசனை மற்றும் அனுசாசனத்திற்கு நன்றி தெரிவித்த பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, “எவ்வாறான சவால்களுக்கு நாடு முகங்கொடுத்தாலும் அனைத்து சந்தர்ப்பங்களிலும் மஹாசங்கத்தினரின் ஆலோசனைகள் மற்றும் அறிவுரைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு அதற்கேற்ப நடவடிக்கை எடுக்கப்படும்” எனக் கூறியுள்ளார்.
குறித்த கலந்துரையாடலின் போது, திவியாகத யசஸ்ஸி தேரர், பலாங்கொட சோபித தேரர், முருத்தெட்டுவே ஆனந்த தேரர், பேராசிரியர் கொள்ளுபிடியே மஹிந்த சங்கரக்கித தேரர், பேராசிரியர் இத்தா தெமளியே இந்தசார தேரர், எல்லே குணவங்ஷ தேரர், ஓமாரே கஸ்ஸப தேரர், நெதகமுவே விஜயமைத்திரி தேரர், பெங்கமுவே நாலக தேரர் உள்ளிட்ட மஹாசங்கத்தினர் பங்கேற்றிருந்தனர்.
மேலும், அமைச்சர்களான தினேஷ் குணவர்தன, ஜீ.எல்.பீரிஸ், உதய கம்மன்பில, விமல் வீரவன்ச, இராஜாங்க அமைச்சர்களான லொஹான் ரத்வத்தே மற்றும் பிரதமரின் மேலதிக செயலாளர் சமிந்த குலரத்ன உள்ளிட்ட அரச அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.