இலங்கையின் 73 ஆவது சுதந்திர தினமான இன்று 04.02.2021 வியாழக்கிழமை வடக்கு – கிழக்கில் காணாமலாக்கப்பட்டோருக்கு நீதிகேட்டு உறவினர்களால் கரிநாள் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
வவுனியா, யாழ்.மத்திய பேருந்து நிலையம், கிளிநொச்சி ஆகிய இடங்களில் காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்களால் கறுப்புப்பட்டி போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணத்தில்…
யாழ்ப்பாணத்தில் இன்று முற்பகல் 10 மணிக்கு போராட்டம் திட்டமிடப்பட்ட நிலையில், போராட்ட இடத்துக்கு வருகை தந்த யாழ்ப்பாணம் பொலிஸார் நீதிமன்றத் தடை உத்தரவை வாசித்துக் காண்பித்தனர்.
எனினும் நீதிமன்றக் கட்டளையில் பெயர் குறிப்பிடப்பட்ட எவரும் ஆர்ப்பாட்டத்தில் இல்லாமையால் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் பொலிஸாரின் அறிவுறுத்தலை ஏற்க மறுத்தனர்.
எவ்வாறாயினும் போராட்டத்தைத் தடுக்க பொலிஸார் கடும் முயற்சிகளை மேற்கொண்டபோதிலும் உறவுகள் தமது போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

கிளிநொச்சியில்…
அத்துடன், கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் கறுப்புப் பட்டி போராட்டத்தை இன்று முற்பகல் 10 மணிக்கு காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் முன்னெடுக்கப்படுகிறது. இந்தப் போராட்டதில் அரசியல் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
வவுனியாவில்…
வவுனியாவில் அதேபோன்று பொலிஸார் நீதிமன்றத் தடை உத்தரவை கையளிக்க முற்பட்ட போதும் போராட்டகாரர்கள் அதனை ஏற்கவில்லை.