தமிழகத்தில் கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் வழங்கிய பயிர்க்கடன் ரத்து செய்யப்படும் என சட்டசபையில் விதி எண் 110-ன் கீழ் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டார். அதனை தொடர்ந்து பயிர்க்கடன் ரத்து செய்வதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டது.
மேலும் பயிர்க்கடன் ரத்து செய்ததற்கான பற்றுச்சீட்டு 10 அல்லது 15 நாட்களில் வழங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருந்தார். இந்நிலையில் சென்னை தலைமை செயலகத்தில் பயிர்க்கடன் தள்ளுபடி திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.
இதைத்தொடர்ந்து தமிழக அரசின் உதவியை பெற 1100 சேவை எண் திட்டத்தை முதலமைச்சர் தொடங்கி வைத்தார். இதையடுத்து காணொலியில் கீழடி 7ம் கட்ட அகழாய்வை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.
தமிழக தொல்லியல்துறை சார்பில் 6 கட்ட அகழாய்வு பணிகள் முடிந்த நிலையில் 7ம் கட்ட அகழாய்வு பணிகளை முதலமைச்சர் தொடங்கி வைத்தார். கீழடி, மணலூர், கொந்தகை, அகரம் ஆகிய 4 இடங்களில் 7ம் கட்ட அகழாய்வு பணி நடக்க உள்ளது.