தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு நாட்டில் தோற்கடிக்கப்பட்டிருந்தாலும் அவர்களின் தனி ஈழ இலக்கு சர்வதேச அளவில் வியாபித்துள்ளது.
தனி ஈழ கொள்கையுடைய அரசியல்வாதிகள் இன்றும் தமிழ் இளைஞர்கள் மத்தியில் பிரிவினைவாதத்தை தூண்டிவிட முயற்சிக்கிறார்கள். இதன் காரணமாகவே தேசிய பாதுகாப்பு விடயத்தில் அதிக அக்கறை கொண்டுள்ளோம் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ரியல் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில், 30வருட கால சிவில் யுத்தம் பாரிய போராட்டத்துக்கு மத்தியில் முடிவுக்கு கொண்டு வரப்பட்டு தேசிய பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டுமாயின் தேசிய புலனாய்வு பிரிவு பலம் கொண்டதாக காணப்பட வேண்டும்.
ஒரு சம்பவம் இடம் பெற்ற பின்னர் புலனாய்வு நடவடிக்கைகளை முன்னெடுப்பது. புலனாய்வு பிரிவினரது செயற்பாடால்ல. தேசிய புலனாய்வு பிரிவு சிறந்த முறையில் காணப்பட்டதால் 30 வருட கால யுத்தம் குறுகிய காலத்தில் நிறைவுக்குக் கொண்டு வரப்பட்டது. யுத்தம் முடிவடைந்த விட்டது என்ற காரணத்தினால் புலனாய்வு பிரிவின் செயற்பாட்டை அப்போதைய அரசாங்கம குறைத்து மதிப்பிடவில்லை யுத்த சூழல் இடம்பெற்ற நாட்டில் எந்நேரத்திலும் புலனாய்வு பிரிவு அவதானத்துடன் செயற்பட வேண்டும் என்பது கடுமையான முறையில் பின்பற்றப்பட்டது.
இதனால் 2009 தொடக்கம் 2015ஆம் ஆண்டு வரையில் நாட்டில் தீவிரவாத செயற்பாடுகள் ஏதும் இடம்பெறவில்லை. 2015 ஆம் ஆண்டு ஆட்சி மாற்றத்தின் பின்னர் தேசிய பாதுகாப்பு பலவீனப்படுத்தப்பட்டது. குறுகிய நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டு தேசிய புலனாய்வு பிரிவின் செயற்பாடுகள் மட்டுப்படுத்தப்பட்டன.
இவ்வாறான செயற்பாட்டை அடிப்படைவாதிகள் சாதகமாக பயன்படுத்தி ஏப்ரல் 21 தினத்தில் குண்டுத்தாக்குதலை முன்னெடுத்தனர். இச்சம்பவம் மேற்கொள்ளப்பட்ட விசாரணை நடவடிக்கை தற்போது பகுதியளவில் நிறைவு பெற்றுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.