அலிபாபா நிறுவனரும் சீன பணக்காரர்களில் முன்னணியிலிருப்பவருமான ஜேக் மா கடந்த மூன்று மாதங்களாக எங்கே போனார் என்று தேடப்பட்டு வந்த நிலையில், முதன்முறையாக பொதுவெளியில் தோன்றியுள்ளார்.
20/01/2021 அன்று காலை 100 ஆசிரியர்களுடனான காணொளி சந்திப்பு நிகழ்ச்சியில் ஜேக் மா உரையாடியுள்ளார்.
சீன அரசைக் கடுமையாக விமர்சித்து வந்த ஜேக் மா, கடந்த ஒக்டோபர் மாதம் முதல் காணாமற்போனதாக சமூக ஊடகங்களில் விவாதிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், பல்வேறு சந்தேகங்களுக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அவர் பொது வெளியில் தோன்றியுள்ளார்.
சீன முன்னணி ஒன்லைன் வர்த்தக நிறுவனமான அலிபாபாவை நிறுவியவர் ஜேக் மா. சீனாவின் மின்னியல் வணிகம் மற்றும் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை சந்தையை அலிபாபா நிறுவனத்தின் மூலம் தனதாக்கிக்கொண்டவர்.
சீனத்தில் தனது வெற்றிக்கொடியை நிலைநாட்டிய அலிபாபா நிறுவனம் தற்போது உலகம் முழுவதும் தனது கிளையைப் பரப்பி வருகிறது. இந்த நிலையில் தான், சீன அரசிற்கும் ஜேக் மாவிற்கும் இடையே மோதல் போக்கு உருவானது. அலிபாபா நிறுவன வளர்ச்சியைத் தடுக்கும் வகையில், சில கோட்பாடுகளை சீன அரசு வகுப்பதாகவும் பழமைவாதத்தை சீன அரசு கைவிட வேண்டும் என்றும் ஜேக் மா கடந்த ஒக்டோபர் மாதம் வெளிப்படையாகவே விமர்சித்திருந்தார்.
இதன் பின்னணியில், கடந்த 3 மாதங்களாக ஜேக் மா பொது நிகழ்ச்சிகள் எதிலும் பங்கேற்கவில்லை. மேலும், அவர் நாட்டை விட்டு வெளியேறக் கூடாது என்று அரசால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருப்பதகாவும் கூறப்பட்டது.
ஜேக் மா வீட்டுக்காவலில் வைக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகமும் எழுப்பப்பட்டது. ஆனால், இதுவரை எந்த தகவலும் உறுதி செய்யப்படவில்லை. ஜாக் மா இருப்பிடம் குறித்த தகவல்களும் வெளியாகாமல் இருந்தது.