120 ரூபா பெறுதியான தேங்காய் ஒன்றை திருடிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் ஒரு லட்சம் ரூபா பெறுமதியான சரீரப் பிணையில் விடுவிக்க கம்பஹா நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளது.
கம்பஹா நீதிவான் மஞ்சுள கருணாரத்ன இதற்கான உத்தரவை பிறப்பித்துள்ளார். கம்பஹா, மல்வத்துஹிரிபிட்டிய பொலிஸார் சந்தேக நபரை நீதிமன்றில் ஆஜர் செய்திருந்தனர். மல்வத்துஹிரிபிட்டிய, நீலமஹர பிரதேசத்தை சேர்ந்த ஒருவரே இவ்வாறு கைது செய்யப்ப்ட்டு பிணையில் விடுவிக்கப்ப்ட்டுள்ளார்.
தோட்ட உரிமையாளர் தனது பிள்ளையுடன் பயணம் ஒன்று சென்று திரும்பும்போது, நபர் ஒருவர் தோட்டத்திலிருந்து ஓடுவதை அவதானித்து, அவரைப் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளார். அதன்படியே பொலிஸார் சந்தேக நபரை நீதிமன்றில் ஆஜர் செய்துள்ளனர். இது குறித்த வழக்கு எதிர்வரும் மார்ச் 18 ஆம் திகதி மீள விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.