அலரி மாளிகையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் ஏற்பாடு செய்யப்படவுள்ள நவராத்திரி நிகழ்வுகளில் பாரதிய ஜனதா கட்சித் தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியன் சுவாமி கலந்துகொள்ளவுள்ளார். இதற்காக பிரதமரால் விடுக்கப்பட்டுள்ள அழைப்பை சுப்பிரமணியன் சுவாமி ஏற்றுக்கொண்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் நேற்று வெளியிட்டுள்ள ருவிற்றர் செய்தியில், “தன்னுடைய குடும்பத்தினருடன் நவராத்திரி நிகழ்வில் கலந்துகொள்ளுமாறு பிரதமர் ராஜபக்ஷ என்னை அழைத்துள்ளார். இதன்போது, “தேசிய பாதுகாப்பு” தொடர்பில் இலங்கை பாதுகாப்புப் படைகளின் சிரேஷ்ட அதிகாரிகள் மத்தியில் நான் உரை ஒன்றையும் நிகழ்த்தவுள்ளேன்” எனத் தெரிவித்துள்ளார்.
இரண்டு தினங்களுக்கு முன்னர் புதுடில்லியிலுள்ள சுப்பிரமணியன் சுவாமியின் இல்லத்துக்குச் சென்ற இந்தியாவுக்கான உயர் ஸ்தானிகர் மிலிந்த மொரகொட, இரு தரப்பு உறவுகள் குறித்து விரிவான பேச்சுக்களை நடத்தியிருந்தார். இலங்கைக்கு தான் விரைவில் விஜயம் செய்யவிருப்பதாக இதன்பின்னர் தனது ருவிற்றர் தளத்தில் சுவாமி தெரிவித்திருந்தார்.