முல்லைத்தீவு – மல்லாவி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆலங்குளம் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பஸ் ஒன்று தீக்கிரையாகியுள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
பஸ் உரிமையாளர் கடந்த 13 ஆம் திகதி மல்லாவி ஆலங்குளம் பகுதியில் உள்ள அவருடைய நண்பர் ஒருவரது வீட்டில் தன்னுடைய பஸ்ஸை நிறுத்திவிட்டு சென்றுள்ளார். இந்த நிலையில் 14 திகதி தைப்பொங்கல் தினத்தன்று அதிகாலை ஒரு மணியளவில் வீட்டின் கதவை தட்டுவது போன்ற சத்தம் கேட்ட நிலையில் வெளியே வந்து பார்த்த போது பஸ் தீப்பிடித்து எரிந்ததாகவும் கண்ணாடிகள் வெடித்து சிதறிய சத்தமே தமக்கு கேட்டதாகவும் யாரோ வேண்டுமென்றே தீ வைத்திருக்க வேண்டும் எனவும் வீட்டு உரிமையாளர் தெரிவித்தார்
இந்த விடயம் தொடர்பாக மல்லாவி பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் விடயத்தை பார்வையிட்டதோடு இரசாயன பகுப்பாய்வு நடவடிக்கைகளையும் மேற்கொண்டனர். இந்நிலையில் இந்த நாசகார செயலை செய்தவர்களை உடனடியாக கண்டறிந்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் அவர்களிடம் இருந்து இழப்பீட்டை பெற்றுத்தர வேண்டும் எனவும் பஸ்ஸின் உரிமையாளர் கோரிக்கை விடுத்துள்ளார்.