மட்டக்களப்பு, காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள ஆரைம்பதியில் வைத்து இனந்தெரியாத சிலரால் தாக்கப்பட்ட பாலமுனை பிரதேசத்தைச் சேர்ந்த பாடசாலை மாணவர்கள் மூவர் உட்பட நால்வர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம், ஆரையம்பதி பிரதான வீதியில் வைத்து நேற்றிரவு (14) இடம்பெற்றுள்ளது.
பாலமுனை அலிகார் வித்தியாலய மாணவர்கள் சிலர், ஆரையம்பதி பிரதான வீதியில் சென்று கொண்டிருந்த போது, அங்கு வந்த இளைஞர்கள் சிலர், அம்மாணவர்களைத் தாக்கியதாகவும் அதைத் தடுக்கச் சென்ற பாலமுனை பிரசேதத்திலுள்ள பள்ளிவாசல் ஒன்றின் செயலாளரும் தாக்கப்பட்டுள்ளதாகவும் காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
பாலமுனையைச் சேர்ந்த முஸ்பிர் (17) அம்ஜத் (17), ஜெஸீம் (17) ஆகிய 3 மாணவர்களும், எம்.முரீத் (30) என்பவருமாக 4 பேரும் தற்போது ஆரையம்பதி மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றர்.