தோலுடன் தோல் தொடர்பு கொண்டால் மட்டுமே அது பாலியல் வன்முறையாக கருத்தில் கொள்ளப்படும் என்று மும்பை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் அதிகரித்த வண்ணம் உள்ளன. குறிப்பாக, சிறுமிகளுக்கு எதிரான பாலியல் அத்துமீறல்கள் தொடர் கதையாகி வருகிறது. இந்த நிலையில், 12 வயது சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட ஒருவருக்கு சிறைத்தண்டனை அளிக்கப்பட்ட வழக்கு விசாரணையின் போது, மும்பை உயர் நீதிமன்ற நாக்பூர் அமர்வு அதிர்ச்சிகரமான கருத்து ஒன்றை தெரிவித்துள்ளது.
வழக்கை விசாரித்த நீதிபதி புஷ்பா கனேடிவாலா, “skin-to-skin contact with sexual intent” அதாவது பாலியல் நோக்கத்துடன் ஒருவரை தோலுடன் தோல் தொடர்பு கொண்டால் மட்டுமே அது பாலியல் வன்முறை என கருத்தில் கொள்ளப்படும் என்றும், ‘mere groping’ will not fall under sexual assault அதாவது பாலியல் நோக்கத்துடன் விருப்பம் இல்லாத ஒருவரை வெறுமனே ஆடைக்கு மேல் தொட்டு பாலியல் தொந்திரவு கொடுத்தால் அது பாலியல் வன்முறைக்கு கீழ் வராது என்றும் தெரிவித்துள்ளார்.
குற்றம் சாட்டப்பட்டவர் பாதிக்கப்பட்ட சிறுமியின் ஆடைகளை கழட்டி, அவரது ஆடைகளுக்குள் கைகளை விட்டு உடல் தொடர்பில் ஈடுபடாமல், மார்பகங்களை ஆடைக்கு மேல் வெறுமனே தொட்டால் அது பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்படாது என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
போக்ஸோ சட்டத்தின் கீழ், பாலியல் வன்கொடுமை என்பது பாலியல் நோக்கத்துடன் தாக்குதல் நடத்துவதும், குழந்தையின் தனிப்பட்ட பகுதிகளைத் தொடுவதன் மூலமோ அல்லது குழந்தையை குற்றம் சாட்டப்பட்டவரின் தனிப்பட்ட உறுப்புகளைத் தொட வைப்பதன் மூலமோ ஊடுருவாமல் உடல் பெறுவதை உள்ளடக்கியது என்றும் நீதிபதி தெரிவித்துள்ளதாக Free Press Journal தெரிவித்துள்ளது.
பாலுணர்வு நோக்கத்துடன் ஒருவரைத் தொடுவது. குறிப்பாக, அப்படித் தொடப்படுவதை விரும்பாதவரைத் தொடுதல் என்பதை ஆங்கிலத்தில் groping என்பார்கள். தடவுதல் என்று எளிமையாக இதைப் பொருள் கொள்ளலாம். இந்த groping என்பதைத்தான் பாலியல் குற்றமல்ல என்கிறது மேற்படித் தீர்ப்பு. மேலும், நீதிமன்ற உத்தரவு தோலுடன் தோல் கொள்ளும் தொடர்பைப் பற்றிப் பேசுகிறது. அப்படியானால், ஆடையின் மேல் அத்துமீறித் தடவுவது பாலியல் வன்முறை அல்லது அத்துமீறலில் வராது என்று ஆகிறது என்பது கவனிக்கத்தக்கது.
தண்டனைகள் கடுமையானால்தான் குற்றங்கள் குறையும் என்ற பேச்சுகள் இருக்கும் நிலையில், நீதிமன்றத்தின் இந்த உத்தரவு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதுடன், பல்வேறு கேள்விகளையும் எழுப்பியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
நன்றி :சமயம்