பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் பெப்ரவரியில் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை இலங்கைக்கு மேற்கொள்ளவுள்ளதாக உத்தியோக பூர்வ தகவல்கள் தெரிவித்துள்ளன.
இந்த விஜயத்தின் மூலம் கடந்த ஆண்டு முதல் கொரோனா தொற்றுநோயால் பாதிக்கப்பட்ட இலங்கைக்கு விஜயம் செய்த முதல் வெளிநாடொன்றின் தலைவராக இருக்கவுள்ளார்
இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கரின் கொழும்புக்கான மூன்று நாள் விஜயத்தின் ஒரு மாதத்திற்குப் பிறகு இம்ரான் கானின் திட்டமிட்ட விஜயம் அமையவுள்ளது.
பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் கடந்த 2016 ஆம் ஆண்டு அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அழைப்பின் பேரில் இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் செய்திருந்தார்.
போர்க் காலத்தில் இலங்கைக்கு இராணுவ உதவிகளை வழங்கிய நாடுகளில் பாகிஸ்தான் ஒன்றாகும். கடந்த காலத்தில் ஐ.நா. மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் இலங்கைக்கு ஆதரவாக பாகிஸ்தானும் முக்கிய பங்கு வகித்தமையும் குறிப்பிடத்தக்கது