அமெரிக்காவில் பொதுக் கழிவறையில் வசித்த 25 வயது இளைஞர் ஒருவர் தற்போது கோடீஸ்வரர் ஆகியுள்ளது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது வீட்டு வாடகை கொடுக்க முடியாமல் வாழ்க்கையில் வறுமையை மட்டுமே பார்த்து வளர்ந்த இளைஞர் ஒருவர் இன்று தனது விடா முயற்சியின் காரணமாக, சொகுசு பங்களா, லம்போர்கினி கார், ஆண்டுக்கு ஒரு நாட்டுக்கு சுற்றுலா என்று அத்தனை தடைகளையும், அவமானங்களையும் தகர்த்தெறிந்து கோடீஸ்வரர் ஆகியுள்ளார்.
அமெரிக்காவின் விர்ஜினியா மாகாணத்தைச் சேர்ந்தவர் பிராண்டன் காண்டி (Branden Condy). சிறு வயதிலேயே தந்தையை இழந்த பிராண்டன், தனது தாயின் அரவணைப்பிலேயே வளர்ந்தவர். இவர்களது குடும்பம் வறுமையின் கோரப்படியில் சிக்கி அதனுடனையே வாழ்ந்து வந்துள்ளது. தாயாரின் வருமானத்தை மட்டுமே நம்பியிருந்த நிலையில், ஒரு கட்டத்தில் அவருடைய வேலையும் பறிபோயுள்ளது. வீட்டு வாடகை கொடுக்க முடியாமல் போனதால், அந்த வீட்டில் இருந்தும் துரத்தப்பட்டுள்ளனர்.
இந்த சூழ்நிலையில் வேறு வழியில்லாமல் இருவரும் சாலையிலேயே வசித்து வந்துள்ளார்கள். சில சமயம் பொதுக் கழிவறைகளில் அவர்கள் வசித்து வந்துள்ளனர். தனது 16 ஆவது வயதில் தாயுடன் தெருவில் நின்ற சிறுவன் பிராண்டன் காண்டி, முதன் முதலாக வீடுகளில் பாத்திரம் தேய்க்கும் வேலைக்கு சென்றுள்ளார். அதன் மூலம் கிடைத்த வருமானத்தை கொண்டு தனது தாய்க்கு உணவளித்து வந்துள்ளார். 21 ஆவது வயதில் படகு கழுவும் வேலை உள்பட சிறு, சிறு வேலைகளை பார்த்து வந்த அவருக்கு எப்படியாவது கஷ்டப்பட்டு சம்பாதித்து தனது தாய்க்கு சொந்தமாக ஒரு வீட்டை வாங்கிக் கொடுக்க வேண்டும் என்பதுதான் மிகப்பெரிய கனவாக இருந்துள்ளது.
இந்த நிலையில், Instagram Marketing Agency மற்றும் வேறு சில சொந்த தொழில்கள் மூலமாக பிராண்டன் காண்டி கடந்த இரண்டு ஆண்டுகளில் கோடீஸ்வரராக மாறியுள்ளார். தற்போது இன்ஸ்டாகிராம் மூலமாக மட்டும் மாதத்திற்கு 25 ஆயிரம் டாலர்கள் சம்பாதித்து வருகிறார் பிராண்டன் காண்டி.
தனது தாயாருக்கு சொந்தமாக வீடு ஒன்றை வாங்கிக் கொடுத்துள்ள பிராண்டன் காண்டி, தானும் சொகுசு பங்களா ஒன்றில் வசித்து வருகிறார். அவரிடம் தற்போது லம்போர்கினி கார் ஒன்று உள்ளது. விதவிதமான ஆடைகளுடன் வலம் வரும் அவர், ஆண்டுக்கு ஒரு நாட்டுக்கு சுற்றுலா சென்று வருகிறார்.
இது குறித்து பிராண்டன் காண்டி கூறுகையில், “எங்களுக்கு வீடு இல்லாத நேரத்தில் நண்பர்களின் வீட்டில் தங்க இடம் கிடைக்குமா என அலைந்துள்ளேன். சில நேரங்களில் பப்ளிக் டாய்லெட்டில் கூட தங்கியிருக்கிறேன். ஆனால் நான் ஒரு போதும் நம்பிக்கையை மட்டும் இழக்கவில்லை. முதலில் நாம் நம்மை நம்ப வேண்டும். எந்த சூழ்நிலையிலிருந்தாலும் அதிலிருந்து மீண்டு வருவோம் என்ற நம்பிக்கை இருந்தால் நிச்சயம் வாழ்க்கையில் ஜெயிக்கலாம்” என்று தனது வெற்றியின் தாரக மந்திரத்தை தெரிவித்துள்ளார்.
நன்றி – சமயம்