நாடளாவிய ரீதியில் வைத்தியசாலை சிற்றூளியர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து 24.02.21 தொடக்கம் இரண்டாவது நாளாக இன்று(25) வரை பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டு வருகின்றார்கள்.
இதன் அங்கமாக முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் சிற்றூளியர்களின் பணிப்புறக்கணிப்பு இரண்டாவது நாளாக தொடர்கின்றது. நாடளாவிய ரீதியில் சுகாதார சேவை தொழில் சங்க ஒன்றியம் பல கோரிக்கைகளை முன்வைத்து பணிப்புறக்கணிப்பிற்கான அறிவிப்பினை விடுத்துள்ளார்கள்.
சுகாதார அரச ஊழியர்களுக்குரிய பதவி உயர்வு வழங்குதல், பயிற்சிகளின் பின்னர் நிரந்தர நியமனம் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இந்த பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்படுகின்றது.
இன்று மாஞ்சோலையில் அமைந்துள்ள மாவட்ட மருத்துவமனைக்கு செல்லும் நோயாளர்களை வரவேற்பதில் இருந்து மருத்துவரிடம் அழைத்துக்கொண்டு செல்வது வரை முழு பணிகளையும் படையினரே மேற்கொண்டு வருகின்றார்கள்.
படையினரின் இந்த நடவடிக்கையால், படையினரை கொண்டு மக்கள் சேவையினை அரசு மேற்கொள்ளுமாக இருந்தால் அரச உத்தியோகத்தர்கள் எதற்கு என்ற கேள்வி முல்லைத்தீவு மாவட்ட மக்களிடையே எழுந்துள்ளது.
மேலும், சிவில் நடவடிக்கைகளில் படையினரின் தலையீடுகள் அதிகரித்துள்ளமையை எடுத்துக்காட்டும் செயற்பாடாக அமைந்துள்ளதாகவும் முல்லைத்தீவு மாவட்டத்தில் இராணுவ மயப்படுத்தலின் உச்ச நிலையை காட்டுவதாகவும் முல்லைத்தீவு மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.