கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் வருகை தந்த இலங்கைப் போக்குவரத்து சபை பயணிகளை இறக்கிவிட்டு பஸ் கோண்டாவில் சாலைக்கு செல்லும்போது யாழ்ப்பாணம் -ஆணைப்பந்தியூடாக இலுப்பையடிச் சந்தியை (பலாலி வீதி) திடீரென கடந்த கார் மீது மோதியதில் காரில் பயணித்தவர்களில் ஒருவர் காயமடைந்துள்ளதுடன் கார் கடுமையாக சேதமடைந்துள்ளது. இச்சம்பவம் 21/01/2021 அன்று இரவு 11.15 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
பஸ் வந்த வேகத்தில் காரினை மோதியதுடன் தொலைபேசி கம்பம், மின்விளக்கு கம்பம் என அருகில் உள்ள பஸ் தரிப்பு நிலையத்தையும் , அருகில் உள்ள ஆடைகள் விற்பனை நிலையத்தின் முகப்பு பகுதியையும் உடைத்து கொண்டு சென்று மோதி நின்றது.

இந்நிலையில் ஆடைகள் விற்பனை நிலையத்திற்குள் உறங்கிக்கொண்டிருந்தவர் ஒருவரின் தலையில் கடும் காயங்களுடன் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேலும் ஆடைகள் விற்பனை நிலையத்துக்கு அருகில் உள்ள வாகன சேவிர்ஸ் நிலையத்தின் ஒருபகுதியும் சேதமடைந்ததுடன் அங்கு நின்ற கார் ஒன்று சிறு சேதங்களுக்கும் உள்ளாகியுள்ளது.
மோதிய போக்குவரத்து சபை பஸ்ஸின் முகப்பு பகுதி கடுமையாக சேதமடைந்துள்ளதுடன் ஆசனங்களுடன் உடைந்துள்ளன. பஸ் மோதிய காரில் பயணித்தவர்கள் மட்டக்களப்பை சேர்ந்தவர்கள் தனியார் நிறுவனம் பணிபுரிபவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.

யாழ்ப்பாணத்துக்கு அலுவலக விடயமாக வந்துள்ளனர். சம்பவத்தில் காயமடைந்தவர் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து யாழ்ப்பாணம் பொலிஸார் சம்பவ இடத்திற்கு வருகைதந்து விசாரணைகளை மேற்கொண்டனர்.



