விண்வெளித் துறையில் தனியார் நிறுவனங்களின் பங்களிப்பை இந்திய மத்திய அரசு ஊக்கப்படுத்தி வருகிறது. இதற்காக IN-SPACe என்ற புதிய அமைப்பை கடந்த ஆண்டு இந்திய அரசு உருவாக்கியது. இதன் உதவியுடன் விண்வெளி சார்ந்த நடவடிக்கைகளில் தனியார் நிறுவனங்களும் ஒன்றிணைந்து செயல்படலாம்.
அந்த வகையில் ஸ்பேஸ்கிட்ஸ் இந்தியா என்ற ஸ்டார்ட் அப் நிறுவனம் SD SAT என்ற செயற்கைக்கோளை உருவாக்கியுள்ளது. இதன் விரிவாக்கம் ’சதீஷ் தவான் சேட்டிலைட்’ ஆகும்.
இந்திய விண்வெளித் திட்டத்தை நிறுவியர்களில் ஒருவர் சதீஷ் தவான் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது பெயரில் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் ராக்கெட் ஏவுதளம் ஒன்று அமைக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் SD SAT செயற்கைக்கோள் இம்மாத இறுதியில் விண்ணில் ஏவ இஸ்ரோ தயாராகி வருகிறது. இதில் மூன்று பிரிவுகள் இருக்கின்றன. ஒன்று விண்வெளி கதிர்வீச்சு பற்றி அறிவதற்காக சேர்க்கப்பட்டுள்ளது.
மற்றொன்று புவியின் காந்த மண்டலத்தை ஆராய அனுப்பப்படுகிறது. மூன்றாவது பகுதி பரந்த பகுதியில் குறைந்த சக்தி கொண்ட தொலைத்தொடர்பு நெட்வொர்க் பயன்பாட்டிற்காக அனுப்பப்படவுள்ளது.
இதுபற்றி பேசிய ஸ்பேஸ்கிட்ஸ் இந்தியா நிறுவனத்தின் நிறுவனரும், தலைமை செயல் அதிகாரியுமான டாக்டர் ஸ்ரீமதி கேசன், எங்களின் விண்வெளி திட்டம் உறுதி செய்யப்பட்டவுடன் யாரெல்லாம் தங்களுடைய பெயர் விண்ணிற்கு செல்ல வேண்டும் என்று விரும்புகிறீர்களோ, அவர்கள் அனைவரும் விண்ணபிக்கலாம் என்று அறிவுறுத்தியிருந்தோம்.
ஒரே வாரத்தில் 25 ஆயிரம் பேர் விண்ணப்பம் செய்துள்ளனர். இதில் ஆயிரம் பேர் வெளிநாடுகளில் இருந்து தங்களது பெயர்களை அனுப்பி வைத்துள்ளனர். குறிப்பாக சென்னையில் உள்ள பள்ளி ஒன்று தங்களது மாணவர்கள் அனைவரது பெயர்களையும் அனுப்பி வைத்திருக்கிறது. பொதுமக்களிடம் விண்வெளி திட்டங்கள், விண்வெளி அறிவியல் மீதான ஆர்வம் அதிகரிக்கும் வண்ணம் இத்தகைய ஏற்பாடுகளை செய்திருக்கிறோம்.
சதீஷ் தவான் செயற்கைக்கோளின் மேற்புற பேனலில் பிரதமர் மோடியின் பெயர் மற்றும் புகைப்படம் வைக்கப்பட்டு விண்வெளிக்கு எடுத்துச் செல்லப்படும். இதன் அருகில் ஆத்மநிர்பார் மிஷன் என்று எழுதப்பட்டிருக்கிறது. இது சுயசார்பு இந்தியா என்ற கொள்கையை விளக்கும் வார்த்தையாகும். ஏனெனில் SD SAT செயற்கைக்கோள் முழுவதும் இந்தியாவில் தயாரிக்கப்பட்டது.
இதில் பயன்படுத்தப்பட்ட எலக்ட்ரானிக்ஸ் மற்றும் சர்க்யூட்ரி உள்ளிட்டவையும் இந்திய தயாரிப்பு என்பது குறிப்பிடத்தக்கது. இந்த செயற்கைக்கோளின் கீழ்ப் பகுதியில் இஸ்ரோ தலைவர் டாக்டர் கே.சிவன், அறிவியல் பிரிவு செயலாளர் டாக்டர் ஆர்.உமாமகேஸ்வரன் ஆகியோரது பெயர்கள் இடம்பெறவுள்ளது. மேலும் இந்துக்களின் புனித நூலாக கருதப்படும் பகவத் கீதை -யும் செயற்கைக்கோளில் எடுத்துச் செல்ல திட்டமிடப்பட்டுள்ளது.
முன்னதாக பிற நாடுகளின் வெவ்வேறு விண்வெளி திட்டங்களில் செயற்கைக்கோள் மூலம் கிறிஸ்துவர்களின் புனித நூலான பைபிள் எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. உதாரணமாக நிலவிற்கு சென்ற அப்போலோ 11 ராக்கெட்டில் விண்வெளி வீரர் பஸ் ஆல்ட்ரின் பைபிளை எடுத்துச் சென்றுள்ளார்.
இதன்மூலம் உலகிற்கு பூமிக்கு வெளியே தனது மதம் சார்ந்த விஷயத்தை கொண்டாடி மகிழ்ந்த முதல் நபர் என்ற பெருமையை பஸ் ஆல்ட்ரின் பெற்றார். இவர் நீல் ஆம்ஸ்ட்ராங்கைத் தொடர்ந்து நிலவில் காலடி வைத்த இரண்டாவது நபர் என்பது கவனிக்கத்தக்கது.
நன்றி :சமயம்