மன்னார்- சாவக்கட்டு கிராமத்தில் இளைஞர் குழு ஒன்று வீடுகளில் புகுந்து தாக்குதல் நடத்தியமையினால், தங்களுக்கு பாதுகாப்பு வழங்குமாறு கோரி பிரதேச மக்கள், நீதவான் வாசஸ்தலத்திற்கு முன் தஞ்சமடைந்துள்ளனர்.
சாவக்கட்டு கிராமத்திற்குள் நேற்று இரவு சுமார் 10 இற்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிலில் முக்கவசம் மற்றும் தலைக்கவசம் அணிந்து, கூரிய ஆயுதங்களுடன் சென்ற இளைஞர் குழு ஆண்கள், பெண்கள் மற்றும் வயோதிபர்கள் என அனைவர் மீதும் தாக்குதல் நடத்தி தப்பிச்சென்றுள்ளனர்.
இதனையடுத்து அந்த கிராம மக்கள் தமக்கு பாதுகாப்பு வழங்க கோரி நேற்று இரவு 8 மணியளவில் மன்னார் மாவட்ட நீதவானின் வாசஸ்தலத்திற்கு முன் ஒன்று கூடி, போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.
இந்த தாக்குதல் சம்பவத்தில் பெண் உட்பட இருவர் காயமடைந்த நிலையில் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். அண்மையில் இளைஞர் குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலை தொடர்ந்து பொலிஸார் சிலரை கைது செய்து பிணையில் விடுவித்திருந்தனர்.
இந்த நிலையிலே இளைஞர் குழு, நேற்று இரவு சாவட்கட்டு கிராமத்திற்குள் சென்று தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக தெரிய வருகின்றது.
இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மன்னார் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.