கேரளாவில் 17 வயது சிறுமிக்கு 38 பேர் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்வம் தொடர்பாக இதுவரை 20 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் பாண்டிகாடு பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமி, தனது தாயாருடன் வசித்து வந்தார். சிறுமிக்கு சமீபத்தில் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதற்காக ஆஸ்பத்திரிக்கு சென்றார்.
அங்கு அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவரிடம் சிறுமி தனக்கு பாலியல் தொல்லை நடந்ததாக கூறினார். இதுபற்றி டாக்டர்கள், குழந்தைகள் பாதுகாப்பு நல அதிகாரிகளிடம் தெரிவித்தனர். அவர்கள், சிறுமியிடம் விசாரணை நடத்தினர்.
அப்போது சிறுமி அவரது 13 வயதில் இருந்தே பாலியல் தொல்லைக்கு ஆளானது தெரிய வந்தது. அதன் பிறகு அந்த சிறுமி உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கும் அவருக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டது.
தொடர்ந்து பாலியல் சித்திரவதைக்கு ஆளானதால் சிறுமியின் உடல்நலம் பாதிக்கப்பட்டது. இதனை தெரிந்து கொண்ட குழந்தைகள் பாதுகாப்பு நல குழுவினர் பொலிஸில் முறைப்பாடு செய்தனர்.
மலப்புரம் பொரலிஸ் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து சிறுமியிடம் ரகசிய விசாரணை நடத்தப்பட்டது. இதில் 38 பேர் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக சிறுமி கூறினார். மேலும் அவர்கள் பற்றிய விவரங்களையும் தெரிவித்தார்.
இதையடுத்து பொலிஸ் 40 பேர் மீது போக்சோ சட்டப்பிரிவில் வழக்குப்பதிவு செய்தனர். இதுபற்றி மலப்புரம் மாவட்ட பொலிஸ் அதிகாரி அப்துல் கரீம் கூறும்போது, சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக 20 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் 20 பேர் தலைமறைவாக உள்ளனர்.
அவர்களை தேடி வருகிறோம். விரைவில் அவர்கள் கைது செய்யப்படுவார்கள். இந்த சம்பவம் தொடர்பாக 13 முதல் 16 வழக்குகளை தனித்தனியாக பதிவு செய்துள்ளோம். அந்த வழக்குகளின் அடிப்படையில் குற்றவாளிகளை தேடி வருகிறோம்.
பாதிக்கப்பட்ட சிறுமிக்கு நிர்பயா மையத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர், பூரண குணம் அடையும் வரை சிகிச்சையில் இருப்பார். சிறுமியை வீட்டிற்கு அனுப்ப நாங்கள் விரும்பவில்லை.
இப்போது வீட்டிற்கு சென்றால் அவருக்கு போதிய பாதுகாப்பு இருக்காது. எனவே அவரை வீட்டிற்கு அனுப்ப நாங்கள் விரும்பவில்லை. சிறுமிக்கு தொடர்ந்து கவுன்சிலிங் கொடுத்து வருகிறோம் என்றார்.
நன்றி – (மாலைமலர்)