இலங்கையில் உள்ள பலஸ்தீன அரசின் தூதுவர் கலாநிதி. ஸுஹைர் எம். எச். டார் செயிட் (28/09) வெளிநாட்டு அமைச்சில் வைத்து வெளிநாட்டு அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸை மரியாதை நிமித்தம் சந்தித்தார்.
இந்த சந்திப்பின் போது, பலஸ்தீன ஜனாதிபதி, அரசாங்கம் மற்றும் மக்களின் வாழ்த்துக்களைத் தெரிவித்த பலஸ்தீன அரசின் தூதுவர், இலங்கைக்கான பலஸ்தீன அரசின் தொடர்ச்சியான ஆதரவை மீண்டும் வலியுறுத்தியதுடன், தற்போதுள்ள நட்புறவுகளை வலுப்படுத்துவதற்கான தனது நோக்கத்தை வெளிப்படுத்தினார்.
முன்னாள் ஜனாதிபதியும் தற்போதைய பிரதமருமான மஹிந்த ராஜபக்ஷ இலங்கை பலஸ்தீன நட்புறவு சங்கத்தை ஒரு இளம் பாராளுமன்ற உறுப்பினராக நிறுவி, கடந்த 25 ஆண்டுகளாக அதன் தலைவராக பணியாற்றியதாக அமைச்சர் பீரிஸ் விவரித்தார். பலஸ்தீனத்தின் பிரச்சனைக்கு இலங்கை தொடர்ந்தும் ஆதரவளித்து வருவதாகவும், ரமல்லாவில் முன்னாள் ஜனாதிபதி ராஜபக்ஷவின் பெயரில் ஒரு வீதிக்கு பெயரிடப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
பலஸ்தீன மக்களின் தவிர்க்க முடியாத உரிமைகளுக்கான இலங்கையின் தொடர்ச்சியான ஆதரவையும், சம்பந்தப்பட்ட ஐ.நா. தீர்மானங்களின் அடிப்படையில் சுதந்திரமான, இறையாண்மை கொண்ட அரசுக்கான உரிமையையும் அமைச்சர் உறுதியளித்தார். பரஸ்பர நன்மைகளுக்காக அதிகமான ஒத்துழைப்பு வேண்டும் என்ற வலுவான உறுதிப்பாட்டை இருவரும் மீண்டும் வலியுறுத்தினர்.