உலகின் பணக்கார மற்றும் மிகவும் சக்திவாய்ந்த நபர்களின் இரகசிய ஒப்பந்தங்கள் மற்றும் மறைக்கப்பட்ட சொத்துக்கள் மிகப்பெரிய அளவில் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. Pandora papers கிட்டத்தட்ட 12 மில்லியன் ஆவணங்களை இவ்வாறு வௌியிட்டுள்ளது.
இந்த ஆவணங்களின் உள்ளடங்கியுள்ள இலங்கையர் தொடர்பில் விசாரணை ஒன்றை முன்னெடுக்குமாறு இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இவ்வாறு விசாரணையை மேற்கொண்டு ஒரு மாத காலத்திற்கும் அது தொடர்பான அறிக்கையை சமர்பிக்குமாறும் ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளதாக அமைச்சர் டலஸ் அழகபெரும தெரிவித்துள்ளார்.
தற்போதைய மற்றும் முன்னாள் ஜனாதிபதிகள், பிரதமர்கள் மற்றும் அரச தலைவர்கள் உட்பட 35 உலகத் தலைவர்களின் இரகசிய விவகாரங்கள் இவ்வாறு அம்பலப்படுத்தப்பட்டுள்ளது. 90 க்கும் மேற்பட்ட நாடுகளில் உள்ள அரசாங்க அமைச்சர்கள், நீதிபதிகள், மேயர்கள் மற்றும் இராணுவ தளபதிகள் போன்ற 300 க்கும் மேற்பட்ட பிற பொது அதிகாரிகளின் இரகசிய நிதி குறித்தும் Pandora papers வௌிச்சம் போட்டு காட்டியுள்ளது.
இந்த தகவல்களில் இலங்கையின் முன்னாள் அமைச்சரான நிரூபமா ராஜபக்ஷவின் பெயரும் குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அவர் மற்றும் அவரது கணவனான திருகுமார் நடேஷன் ஆகியோர் இணைந்து லண்டன் மற்றும் சிட்னி நகரங்களில் அதிசொகுசு வீடுகளை கொள்வனவு செய்துள்ளதாக குறித்த தகவல்களில் குறிப்பிட்ப்பட்டுள்ளது.