எகிப்து, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஜோர்டான், இந்தோனேசியா, பிரேசில், பாகிஸ்தான் உள்ளிட்ட பல நாடுகள் சீனா தயாரிக்கும் கொரோனா தடுப்பூசிகளை அவசரகால பயன்பாட்டிற்கு அங்கீகாரம் அளித்துள்ளன.
மேலும் சிலி, மலேசியா, பிலிப்பைன்ஸ், தாய்லாந்து மற்றும் நைஜீரியா உள்ளிட்ட பல நாடுகள் சீன தடுப்பூசிகளுக்கு உத்தரவிட்டுள்ளன அல்லது தடுப்பூசிகளை வாங்குவதில் அல்லது வெளியிடுவதில் சீனாவுடன் ஒத்துழைக்கின்றன.
இந்தோனேசியா, தனது உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு நிறுவனம் மூலம், சீனாவின் உயிர் மருந்து தயாரிப்பு நிறுவனமான சினோவாக் பயோடெக்கின் கொரோனா தடுப்பூசியை ஜனவரி 11 அன்று பயன்படுத்த ஒப்புதல் அளித்தது.
நாட்டில் அதன் கடைசி கட்ட சோதனைகளின் இடைக்கால முடிவுகள் 65.3 சதவிகிதம் செயல்திறன் விகிதத்தைக் காட்டிய பின்னர், தடுப்பூசிக்கான அவசரகால பயன்பாட்டு அங்கீகாரத்தை நிறுவனம் வெளியிட்டது.
இந்தோனேசிய ஜனாதிபதி ஜோகோ விடோடோ ஜனவரி 13, 2021 அன்று, கொரோனா தடுப்பூசியை பெற்றார். ஜனாதிபதிக்குப் பிறகு, இந்தோனேசிய இராணுவத் தலைவர், தேசிய காவல்துறைத் தலைவர் மற்றும் சுகாதார அமைச்சர் ஆகியோருக்கும் தடுப்பூசி போடப்பட்டது.
துருக்கியில் சீன தடுப்பூசியை அவசரமாக பயன்படுத்த அதிகாரிகள் ஒப்புதல் அளித்ததை அடுத்து, ஜனவரி 14 ஆம் திகதி துருக்கி கொரோனாவுக்கு எதிரான வெகுஜன தடுப்பூசி போடத் தொடங்கியது.
துருக்கியில் 600,000 க்கும் மேற்பட்ட சுகாதார ஊழியர்கள் நாட்டின் தடுப்பூசி திட்டத்தின் முதல் இரண்டு நாட்களில் சீனாவின் சினோவாக் உருவாக்கிய முதல் அளவிலான கொரோனா தடுப்பூசிகளைப் பெற்றுள்ளனர்.
துருக்கிய சுகாதார அமைச்சர் பஹ்ரெடின் கோகா, ஜனவரி 13, 2021 அன்று, துருக்கியின் ஆலோசனை அறிவியல் கவுன்சில் உறுப்பினர்களுடன் சினோவாக் தடுப்பூசியை நாடு முழுவதும் தடுப்பூசி விநியோகிப்பதற்கு முன்னைய நாளில் செலுத்தக்கொண்டார்.
இந்தியப் பெருங்கடலில் உள்ள சீஷெல்ஸில் 2021 ஜனவரி 10 ஆம் திகதி கொரோனா வைரஸுக்கு எதிராக தடுப்பூசியை மக்களுக்கு போடத் தொடங்கியது.
அந்நாட்டின் தலைநகர் விக்டோரியாவில் உள்ள ஒரு மருத்துவமனையில் நாட்டின் ஜனாதிபதி வேவெல் ராம்கலவன் தடுப்பூசியைப் போட்டுக்கொள்ளும் நிகழ்வு நேரடியாக தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டது.
2020 ஆம் ஆண்டு டிசம்பர் 13 ஆம் திகதி பஹ்ரைனின் சுகாதார சீராக்கி, சீன தேசிய மருந்துக் குழு அல்லது சினோபார்ம் உருவாக்கிய கொரோனா தடுப்பூசியை பதிவு செய்வதற்கு அதிகாரப்பூர்வமாக ஒப்புதல் அளித்துள்ளதாக பஹ்ரைன் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
மருத்துவ பரிசோதனை தரவுகளை முழுமையாக மதிப்பீடு செய்த பின்னர் தடுப்பூசிக்கு ஒப்புதல் அளித்ததோடு அதனை பயன்படுத்துவதற்கு தேசிய சுகாதார ஒழுங்குமுறை ஆணையம் நடவடிக்கைகளை எடுத்திருந்தது.
ஆகஸ்டில் தடுப்பூசியின் மூன்றாம் கட்ட மருத்துவ பரிசோதனைகளில் பங்கேற்ற பஹ்ரைன், நவம்பர் மாதத்தில் சினோபார்மின் தடுப்பூசியை அவசரமாகப் பயன்படுத்துவதற்கு அங்கீகாரம் அளித்தது. அதேநேரம், பஹ்ரைனில் இளவரசர் உட்பட பல அமைச்சர்கள் மற்றும் மூத்த அதிகாரிகள் இந்தத் தடுப்பூசி பெற்றுள்ளனர்.
சீனா தேசிய மருந்துக் குழு அல்லது சினோபார்ம் உருவாக்கிய கொரோனா தடுப்பூசியை பயன்படுத்துவதாக 2020 டிசம்பர் 9 அன்று ஐக்கிய அரபு அமீரகம் அறிவித்தது.
டிசம்பர் 23ஆம் திகதி அனைத்து குடிமக்களுக்கும் குடியிருப்பாளர்களுக்கும் இலவசமாக சீன-உருவாக்கிய கொரோனா தடுப்பூசிகளை வழங்கும் முதல் நாடாக ஐக்கிய அரபு அமீரகம் திகழ்ந்தது.
கொரோனா ஆபத்தில் இருக்கும் முன்னணி தொழிலாளர்களைப் பாதுகாக்க இந்த தடுப்பூசிக்கு சுகாதார அமைச்சினால் செப்டம்பர் மாதம் அவசர பயன்பாட்டு அங்கீகாரம் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
ஐக்கிய அரபு எமிரேட்ஸில் மூன்றாம் கட்ட சோதனைகளில் 125 நாடுகள் மற்றும் பிராந்தியங்களைச் சேர்ந்த 31,000 தன்னார்வலர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.