கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மத உணர்வுகளை மதிக்கவேண்டும் என்று இலங்கை மற்றும் மாலைதீவுக்கான அமெரிக்க தூதுவர் அலைனா டெப்லஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழப்போரின் சடலங்கள் இலங்கை அரசாங்கத்தினால் தகனம் செய்யப்பட்டு வருகின்றன. எனினும், இறந்த முஸ்லிம்களின் சடலங்களை அவர்களின் மத நம்பிக்கைக்கு இணங்க அடக்கம் செய்யுமாறு பல்வேறு தரப்புக்களாலும் வலியுறுத்தப்பட்டு வருகின்றது.
இந்த நிலையிலேயே, மேற்கண்ட கோரரிக்கையை வெளியிட்டுள்ளார்.
கொரோனா வைரஸினால் உயிரிழந்த அனைவரினதும் குடும்பத்தினருக்கு ஆதரவாக அமெரிக்கா உள்ளது என குறிப்பிட்டுள்ள அவர், சர்வதேச சுகாதார வழிகாட்டுதல்களின்படி மதநம்பிக்கைகளை பின்பற்ற அனுமதிப்பதன் மூலம் உரிமையையும் கௌரவத்தையும் மதிக்கவேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.
இலங்கை 1955 இல் கைச்சாத்திட்ட சர்வதேச மனித உரிமை பிரகடனம் அனைவரும் கற்பித்தல், பின்பற்றுதல், வழிபடுதல் போன்றவற்றில் தங்கள் மதநம்பிக்கையை பின்பற்றுவதற்கான உரிமையுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வைரஸ் தொற்றானது சர்வதேச சவால்களை உருவாக்கினாலும் இதற்காக இரக்க குணத்தையும் நம்பிக்கைகளை மதிப்பதையும் இழக்கும் நிலையேற்படக்கூடாது எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.