இந்தியா முழுவதும் 72 ஆவது குடியரசு தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் தலைநகர் டெல்லியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், விமான நிலையங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

3 புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் விவசாயிகள் இன்று டிராக்டர் பேரணியை நடத்துக்னிறனர். இதற்காக ஆயிரக்கணக்கான டிராக்டர்களுடன் விவசாயிகள் டெல்லியில் குவிந்துள்ளனர். மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி பஞ்சாப், ஹரியாணா மாநில விவசாயிகள் டெல்லியின் எல்லைப் பகுதிகளில் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
11 கட்ட பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததால் 62 ஆவது நாளான இன்று டிராக்டர் பேரணியை விவசாயிகள் முன்னெடுத்து வருகின்றனர்.

ஹரியானா எல்லையான சிங்குவில் இருந்து தொடங்கும் பேரணி கன்ஜாவாலா, பவானா, அவுசான்டி எல்லை , கே.எம்.பி.எக்ஸ்பிரஸ் வழியாக மீண்டும் சிங்குவை சென்றடையும்.
இதையடுத்து திக்ரி எல்லையில் இருந்து தொடங்கும் பேரணி நாக்லோ, நஜாப்கர், மேற்கு எல்லைப் பகுதி எக்ஸ்பிரஸ் வே வழியாக மீண்டும் திக்ரியை சென்றடையும்.

மூன்றாவதாக டெல்லி- உத்தரப்பிரதேச எல்லையான காஜிப்பூர் எல்லையில் இருந்து தொடங்கும் பேரணி குன்ட்லி, காஜியாபாத், பல்வால் எக்ஸ்பிரஸ் வே வழியாக சென்று மீண்டும் காஜிப்பூரை அடையும். சுமார் 100 கிலோ மீட்டருக்கு நடைபெறும் இந்த பேரணி மாலை ஆறு மணிக்கு முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

