கிளிநொச்சி – பளை கரந்தாய் பகுதியில் தென்னை பயிற்செய்கை சபைக்கு செந்தமான நிலத்தில் தங்கியிருந்த மக்களை பொலிஸாரின் ஒத்துழைப்புடன் அதிகாரிகள் வெளியேற்றிய நிலையில் அதனை கண்டித்து மக்கள் A-9 வீதியை மறித்து 15.02.2021 அன்று போராட்டம் நடத்தியுள்ளனர்.
1976ம் ஆண்டு அந்தப் பகுதியில் குடியேறிய மக்கள் பின்னர் போர் காரணமாக தமது இருப்பிடங்களில் இருந்து வெளியேற்ற நிர்ப்பந்திக்கப்பட்டனர். மீண்டும் 2010ம் ஆண்டு மக்கள் மீளவும் குடியேறியிருந்தனர். இதனையடுத்து தமக்குரிய காணி என கூறிய தென்னை பயிர்செய்கை சபை 2015ம் ஆண்டு மக்களை வெளியேற்றியிருந்தது.
இதன் பின்னர் பாதிக்கப்பட்ட மக்கள் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறையிட்டும், ஆணைக்குழு நடவடிக்கை எடுத்தும் மக்களுக்கு நியாயம் கிடைக்கவில்லை. இதனையடுத்து கடந்த 2 வருடங்களாக மக்கள் தாங்களாகவே தமது காணிகளில் குடியேறி வாழ்ந்துவந்த நிலையில் இன்றைய தினம் அங்கு சென்ற அரச அதிகாரிகள் மற்றும் பொலிஸார் மக்களின் கொட்டில்களை பிடுங்கி எறிந்ததுடன்
தம்மையும் தாங்கியதாக பாதிக்கப்பட்ட மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளதுடன், வீட்டிலிருந்த பொருட்களை துாக்கி எறிந்ததாகவும் மக்கள் கூறுகின்றனர்.
இதனையடுத்து துாக்கி எறியப்பட்ட பொருட்கள் மற்றும் கிடுகுகளுடன் மக்கள் A-9 வீதியை முற்றுகையிட்டு
சுமார் 1 மணிநேரம் போராட்டம் நடத்தினர். இதனால் போக்குவரத்து முடங்கியது. இந்நிலையில் மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய பொலிஸார் பிடுங்கப்பட்ட கொட்டில்களை மீளவும் அமைத்து தருவதாக வாக்குறுதி வழங்கியதை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.